Saturday 4 May 2013

கும்பகோணம் கோவாலும் கோபம் வராத சனியும்




வண்க்கம்... இன்றைய தலைப்பு வந்து:

“கும்பகோணம் கோவாலும் கோபம் வராத சனியும்”


இந்த தலைப்போட அருமை பெருமை எல்லாம் சொல்ல நான் ஒண்ணும் சாலமன் பாப்பையா இல்ல. தாங்கள் அறியாதவை ஒன்றும் இல்லை. ஆதலால் எல்லாம் தெரிந்த நீங்களே அருமை பெருமை எல்லாம் யோசிச்சுக்கோங்க..

.....

ஹலோ எம்மா நேரம் யோசிப்பீங்க? வாங்க கதைக்குள்ள போகலாம்.

முன்னுரை:

நம்ம கோவாலு இருக்கானே கொஞ்சம் லூசுனு ஊர்ல பேசிப்பாங்க.. அப்ப அவன் அறிவாளிதான் என்று சொல்லாமல் சொல்ல கடமை பட்டுள்ளேன்.


கோவாலு "கட்ட வெளக்கமாறு" படிச்சானா, அவனோட அப்பாவோ பாம்பு படம் போட்ட பஞ்சாங்கத்தை படிச்சுக்கிட்டு இருப்பாரு. தெருக்குழாயில வரும் தண்ணிய புடிக்க கூட நல்லநேரம், ஓரை, பாத்து போக சொல்லும் அளவுக்கு தன்னோட தன்னம்பிக்கையை நம்பிக்கையை பஞ்சாங்கம், ஜோசியம் மேல் வைத்திருப்பவர்.


வழக்கம் போல் நம்ம கதையில வரும் மகனும் அப்பாவின் கொள்கைக்கு எதிரானவனே.


அப்பா காலையில் கண் விழிப்பது “சாமி” படத்தில் என்றால் கோவாலு கண் விழிப்பதோ சாமி பட “திரிஷா” மீது.

கல்யாணயுரை:

நம்ம கோவாலுவுக்கு அறுவடை செய்யும் நேரம் வந்த விட்டதால் வீட்டில் அப்பாவுக்கு, அம்மாவுக்கு வேலை மிக அதிகம் ஆயிற்று.

அதாங்க அறுவடைனா கலியாணம்.

பையன் கொஞ்ச கலப்படம் இல்லாத சுத்த சொக்க தங்கம். அதனால் இந்த காதல், கொப்பரை தேங்கா (கத்திரிக்கா கோவாலுக்கு அலர்ஜி) என எதுவும் கிடையாது. அதனால் தெளிவா சொல்லிட்டான்,

“அப்பா நீங்க உங்க விருப்பப்படி ஜாதகம் எல்லாம் பாத்து செய்ங்க. பொருத்தம் இருந்தா மேற்கொண்டு பொண்ணு பார்ப்பது, பஜ்ஜி தின்பது பற்றி பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டான்.

என்னதான், இவனுக்கு இந்த ஜாதகத்தில் நம்பிக்கை எல்லாம் இல்லை என்றாலும், மணவாட்டி காதலி, மாமன் மகள், அத்தை மகள் என்ற ரூபத்தில் இல்லாத காரணத்தினால் இவன் வேறு வழி இல்லாமல் அப்பாவின் போக்கில் விட வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது.

அப்பாவோ அவர் கணக்கில் ஜாதகம் பார்த்து பெண்ணை பார்க்க பையனை அழைத்தார். இரண்டு முறை கார், கோவாலுக்கு மேக்கப், பொண்ணு வீட்டில் பஜ்ஜி-யோடு நின்றது. அதற்கு பிறகு இரண்டு பொண்ணு வீட்டிலும் ஜாதகம் பொருத்தம் இல்லை என்றே தகவல் வந்தது.

கோவாலுவுக்கு வந்த கோபத்தில், “நீங்க ஜாதகம் பார்ப்பதை நிப்பாட்டிட்டு நல்ல ஜாதகரா பார்த்து ஜாதகம் பொருத்தம் பார்த்து பொண்ணு பார்க்க கூப்புடுங்க” என கறாராக சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டான் சென்னைக்கு.

அப்பாவோ குற்ற உணர்ச்சியில் பையன் ஜாதகத்தை எடுத்து நல்ல ஜாதகரிடம் ஜாதகம் பாக்க புறப்பட்டார்.

ஜாதகஉரை:

பாக்ஸ் ஸ்டார் ஜோஷி மணி ஜாதக கடை: (ஜாதகம் வியாபாரமான பிறகு கடை என்று சொல்வது பொருத்தமானதே- மேலும் பாக்ஸ் ஸ்டார் காரணம் கேட்டதற்க்கு ஜாதகமே கட்டம்தானே என்கிறார்!!!!)

“அய்யா வணக்கம், என் பையனுக்கு கல்யாணம் பண்ணனும். அவனுக்கு ஜாதகம் பாக்கணும்” என்றார்.

“ஜாதகம் தானே கொண்டு வந்துருக்கீங்க? ரேஷன் கார்ட் இல்லைல!!” என்று சொல்லி விட்டு அவரே பகீர் என சிரித்து கொண்டார்.

அப்பாவுக்கோ பகீர் என்றானது.

“பையன் ஜாதகம் இது, பாத்துட்டு எந்த திசையில் பொண்ணு வரும்?, என்ன என்ன நட்சத்திரம் பொருத்தமா இருக்குனு சொல்லுங்க” என்று கையில் கொடுத்தார் அப்பா.

ஜாதகரோ இருக்கும் இரண்டு கண்ணை நன்றாக விரித்து கட்டத்தை அளந்து பாத்து, திரிகோண பார்வை, லக்ன பார்வை என்றெல்லாம் கணக்கு போட்டு பார்த்து இறுதியாக அகல விரித்திருந்த கண்ணை லைட்டா சுருக்கி ஒரு கிளிப்பார்வை பார்த்தார்.

அப்பாவுக்கோ ஜாதகரின் கிளிப்பார்வை அடிவயிற்றில் கிலியை பரப்பிற்று.

“என்ன அய்யா, எதாச்சும் தோஷம் இருக்கா? கல்யாணம் இப்போ பண்ணலாம்ல? என்று மார்கழி மாதம் போல் நடுக்கத்தில் கேட்டார்.

“அதெல்லாம் பேஷா பண்ணலாம், என்ன பையனுக்கு நவக்கிரக தோஷம்

இருக்கு, பரிகாரம் பண்ணனும் அதுக்கு” – என்று குண்டு சட்டியை போட்டு உடைத்தார்.


“என்னது, நவக்கிரக தோஷமா? என்ன சொல்றீங்க? “நான் முப்பது நாளில் ஜாதகம் பார்ப்பது எப்படி”-னு புத்தகம் வாங்கி முழுவதும் படிச்சுருக்கேன். ஆனால் இப்படி ஒரு தோஷம் அதில் பார்த்ததே இல்லை” என்றார்.


“அப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்றீங்களா? இங்க பாருங்க..

“ஒரு வருடத்தில் ஜாதகம் பார்ப்பது எப்படி”-ங்குற புத்தகம். உங்கள விட பொறுமையா, அதிகமா படிச்சுருக்கேன், உங்களுக்கு வேண்டாம்னா ஜாதகம் பாத்ததுக்கு கூலிய கொடுத்துட்டு போய்ட்டே இருங்க, என்கிட்ட ஜாதகம் பாக்க உங்களுக்கு கொடுத்து வைக்கல-னு நினைச்சுக்குறேன்” என்று ஆவேசத்துடன் கூறியபடி கைக்குட்டையை உதறிவிட்டு சென்றார் ஜோஷி மணி.

(துண்டை உதற சுற்றும் முற்றும் பார்த்தார். துண்டு கிடைக்கல. வேட்டிதான் இருந்தது. அதை உதறினால் அசிங்கமாகி விடும் என்பதால் இருந்த கைக்குட்டையை உதறி விட்டு சென்றார் – உள்ளே சென்று நிலை கதவு இடுக்கில் வழியாக என்ன செய்கிறார் என்று பார்த்தது வேறு விஷயம்!!!!!)


நவக்கிரகயுரை:

பிற்பாடு அப்பாவோ சஞ்சலத்தில் சமாதானம் ஆகி, சமரசம் ஆகி நவக்கிரக தோஷம் அப்பாவின் நடு வீட்டில் வந்து அமர்ந்தது.

“இங்க பாருங்க, இந்த தோஷம் புதுசு. இப்போதான் அமெரிக்காவுல கண்டு புடிச்சுருக்காங்க. இதுக்கு பரிகாரம் பண்ணலைனா உங்க பையனுக்கு கல்யாணமே பண்ண முடியாது.” என்று “ஏழாம் அறிவு” ஸ்ருதி கணக்கில் அள்ளி விட்டார் ஜோஷி மணி.

“சரிங்க, இந்த தோஷத்துக்கு என்ன பண்ணணும்னு சொல்லுங்க” என்று எஜமான்-தொழிலாளி உறவில் கைகட்டி கேட்டார் அப்பா.

“இது மாதிரி தோஷத்துக்கு இருக்கும் ஒரே பரிகாரம், அனைத்து நவக்கிரக கோவிலுக்கு சென்று ஆண் என்றாள், அர்ச்சனைசெய்து, கோவில் உண்டியலில் போடும் பணத்திற்க்கு இரண்டு மடங்கு அதிகமாக கோவில் அர்ச்சகர் தட்டில் போட்டு விட வேண்டும், பெண் என்றாள் பிரசாத விநியோகம் செய்ய வேண்டும். தோஷம் சரியாயிடும், அப்புறம் பாருங்க பொண்ணுங்க தானா தேடி வருவாங்க” செல்ல சிரிப்புடன் அவ்ளோதான் என்றார் பாக்ஸ் ஸ்டார்.

அப்பாவும் ஒரு பெரிய புதிர்க்கு விடை கிடைத்தது போல் மகிழ்ச்சியில் வீடு சென்றார்.

******************* முதல் பாகம் முற்றும்*************************
சண்டையுரை:

அப்பா – மகன் - நவக்கிரக கோவில் தரிசனம் - அப்பா வேண்டுகோள் - பையன் முரண்டு பிடிப்பு - அப்பா-அம்மா கெஞ்சல் - பையன் சிணுங்கல், அப்பா,அம்மா மிரட்டல்- பையன் சம்மதம்- அலுவலக கடன்உதவி – நவக்கிரக பயணம். (விவரமா எழுதுனா எனக்கு வயசாகிடும்!!!)

********************* இரண்டாம் பாகம் முற்றும் *******************

சனியுரை:

ஒருவழியாக முதலில் சனீஸ்வர பகவானை தரிசிப்பதாக முடிவு.

அப்பா, அம்மா, கோவாலு மூவரும் சனிக்கிழமை அன்று மாருதி ஆல்டோவில் ஜம்பமாக புறப்பட்டார்கள்.


கோவிலுக்கு போன பிறகு தான் தெரிந்தது. அன்று சனிப்பிரதோஷம் என்று.


“டேய் கோவாலு, பாத்தியா இன்னைக்கு சனிப் பிரதோஷம், ரொம்பவே விஷேசமான நாள். இன்னைக்கு தெய்வ தரிசனம் கிடைப்பது புண்ணியம்டா”- என்றார் அம்மா.

“ஆமா, ஆமா, பிரதோஷம்-னா பிரசாதம் நிறைய கிடைக்கும்ல? ஹை ஹை ஜாலி.. ஜாலி.. இன்னைக்கு நைட்டு சாப்பாடு இங்கேயே முடிச்சுக்கலாம்”- என்றான் கோவாலு.

அப்பா, அம்மா இருவரும் டைமிங்கில் “சூப்பர் சிங்கர்” ஜட்ஜ் போல் முறைக்க ஆரம்பிக்க கோவாலு சுதாரித்து

“வாங்க தரிசனம் செய்ய போகலாம்” என்றான்.

அர்ச்சனை தட்டு 40 ரூபாய், எள்ளு விளக்காம் அது ஒரு 10 ரூபாய். அர்ச்சனை சீட்டு 5 ரூபாய். கட்டண வழி கட்டணம் 50 ரூபாய். (ஆல்டோ குடும்பமாச்சே!!!!) உண்டியல் 100 ரூபாய், அர்ச்சனை தட்டில் 200 ரூபாய்,

தரிசனம் முடிந்து அனைவரின் கழுத்திலும் அர்ச்சகர் மாலையை போட்டார். கடவுளே மாலையை போட்டது போல் பவ்யமாக வாங்கினார் அப்பா.

தரிசனம் முடிந்து வெளியே வந்தார்கள். உடனேயே செல்ல கூடாதாமே!!! ஆதலால் சிறிது சுற்று பிரகாரத்தில் அமர்ந்தார்கள்.

பிரகாரயுரை:

கோவாலு கையில் எள்ளு விளக்கை எடுத்து கொண்டு பிரகாரத்தினை இன்னொரு முறை சுற்றி வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.

பிரகாரத்தின் தென் மூலையில் ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகத்தில் மக்கள் கொண்டு வரும் பூவினை பூசாரி சாத்தி கொண்டிருந்தார். ஒரு பெண்மணி கொடுத்த பூவினை விக்கிரகத்தின் காலின் அருகே அழகாக சுத்தி விட்டார் பூசாரி..

பெண்மணிக்கு வந்த கோபத்தில் “நான் கொண்டு வந்த பூவினை காலில் வைக்கிறார் பாரு” என கத்தி விட்டு சென்று விட்டார்.

மற்றொரு பெண்மணி கொடுத்த பூவினையோ விக்கிரகத்தின் தலையில் வைத்து அலங்காரம் செய்ய, பெண்மணியோ அவர் தெரு வாசிகளிடம் என்னோட பூவு தலையில் இருக்கு பாருங்கள் என்று கூறி கொண்டிருந்தார்.

கோவாலு, மக்கள் எதற்கு பூ கொடுக்கிறார்கள், ஏன் இவ்வாறு சண்டையிடுகின்றனர், என சிந்தித்தான். சிரித்தான். பிரகாரம் சுற்றி நடந்தான்.

தூண்களுரை:

கோவிலில் உள்ள தூண்களை பார்த்தவாறு நடந்தான். தூண்கள் அனைத்துக்கும் விபூதி, குங்குமம் கொட்டி அலங்காரம் செய்திருந்தார்கள் மக்கள்.

“தூண்களில் நான்கு பக்கங்களிலும் சிற்பிகள் அந்நாளிலே விபூதி, குங்குமம் கொட்ட ஏதுவாக செதுக்கிருப்பதை பார்த்து வியந்தான்”


"மனதுக்குள் கோவிலில் தூண்கள் மட்டும் இல்லையென்றால் மக்கள் விபூதி எங்கே கொட்டுவது என்று தெரியாமல் பெரும் அவதிக்குள்ளாயிருப்பார்" என்று நினைத்து கொண்டே விளக்கேற்றும் பகுதிக்கு வந்திருந்தான்.

ஏற்கனவே வாங்கிருந்த எள்ளு விளக்கை கடினப்பட்டு ஏற்றினான். கை முழுவதும் எண்ணை. கையிலோ கைக்குட்டை இல்லை. வெள்ளை பேண்ட் வேறு. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். அருகில் சிறுமியோ வேகமாக வந்தாள். விளக்கேற்றினாள். கையில் எண்ணையை பக்கத்தில் உள்ள தூணில் துடைத்து விட்டு போயே போய் விட்டாள்.

அட.. இந்த தூண் இதற்கு கூடவா உதவுகிறது என்று வியந்தான். பிறகு பக்கத்தில் கிடந்த தாளில் துடைத்துவிட்டு குப்பை தொட்டியில் போட்டு விட்டு எல்லாம் முடிந்த நிம்மதியில் பிரகாரச்சுற்றினை இனிதே முடித்தான்.

பிரசாதயுரை:

பிரகார தென்மூலையில் சரியான கூட்டம். என்ன என்று பார்க்க வேகமாக நடந்தான்.

“எனக்குத் தாங்க, எம்மா நேரமா நிக்குறேன்!!”

“எத்தனை தடவை வாங்குவ? மத்தவங்க எல்லாம் வாங்க வேணாம்?”

“யோவ், வரிசையில வாயா!!’

“ஏங்க, பொண்ணுங்க நிக்குறது தெரியல? அங்க போயி உங்க வரிசையில் நில்லுங்க”

“ஒருத்தர் ஒருத்தரா வாங்கப்பா !!”

என கூச்சல்கள்.. அருகில் செல்ல செல்ல தான், கோவாலுக்கு புரிந்தது அந்த கூச்சல்களுக்கு எல்லாம் காரணம் “ஒரு கரண்டி சர்க்கரை பொங்கலுக்கு” என்று.

இதில் ஒருவர் “இங்க தரும் பொங்கலில் மட்டும் தான் நெய் மனம் தூக்குது” என்றார்.

பிரசாத விநியோகம் இனிதே முடிந்தது. மக்கள் அனைவரும் கலைந்தனர். பிரசாதம் கொடுத்த இடம் அனைத்து சோற்று பருக்கைககள் இறைந்து கிடந்தும், அவைகள் ஆங்காங்கே காலில் மிதிபட்டும் காட்சி அளித்தன.

“புண்ணியத்திற்க்காக பிரசாதம் கொடுத்து இறுதியில் சோற்று பருக்கைகளை இவ்வாறு கீழே சிந்தி பாவங்களை சம்பாதித்து கொள்கின்றனர்” – என்று நினைத்து கொண்டான்.

மனம் பொறுக்க வில்லை. பெற்றோர் எங்கே என பார்த்தான். காணவில்லை. சரி என்று நினைத்தபடி அருகில் கிடந்த துடப்பத்தை எடுத்து பருக்கைக்களை கூட்ட ஆரம்பித்தான்.

காதலுரை:

அவ்வாறு கூட்ட ஆரம்பிக்கும் போது ஒரு பெண்மணி வேகமாக ஓடி வந்தாள். இவன் குனிந்து கூட்ட முற்படும் போது கொலுசு அணிந்த கால் அருகில் நிற்பதை பார்த்தான். சற்றே நிமிர்ந்தான். பெண் அருகில் நிற்பதை பார்த்தான். அதிலும் தன்னை நோக்கியவாறு இருப்பதை பார்த்தான். மிரண்டான்.

சுந்தர வடிவு,

சிரித்த முகம்,

குழி விழுந்த கன்னம்,

மை தீட்டிய இமை விழி.
பளிங்கு பார்வை,

இரு சுருள் முடிகள் சூழ் நெற்றி,
அழகு புடவை.
--------- போதும் போதும் கதைக்கு வருவோம் --------

“ஏங்க, நீங்க கூட்டி கிட்டு இருக்கீங்க?, நாங்க தான் பிரசாதம் கொடுத்தோம். பாத்திரத்தை வைத்து விட்டு கூட்ட வரலாம் என்று சென்றேன். அதுக்குள்ள நீங்களே கூட்டுறீங்களே?”

“எவ்ளோ கீழே சிந்திருக்குன்னு. எல்லாம் காலில் மிதிபட்டு ச்சே ச்சே ச்சே எல்லாம் பாவமும் எங்களைதான் சேரும்”

“இந்த பிரசாதத்துக்கு இந்த மக்கள் ஏன் இவ்ளோ அடிச்சி புடிச்சுக்குறாங்க?”

“நான் பாட்டுக்கு சென்னையில் இருந்திருப்பேங்க.. அப்பாதான் தோஷம் கழிக்கணும்னு சொல்லி பிரசாதம் கொடுக்க வச்சுட்டாங்க.. பாருங்க எவ்ளோ சிந்திருக்குன்னு..

இவ்வாறு கூறி கொண்டே குடுங்க என்று கையில் உள்ள துடப்பத்தை பிடுங்கி முழுவதுமாக கூட்டி முடித்தாள்.

“எவன் அந்த ஜோசியர்னு தெரியல.. ஏதோ “நவக்கிரக தோஷமாம்” – எல்லா நவக்கிரக கோவிலுக்கும் போகனுமாம், பரிகாரம் பண்ணனுமாம் – கையில கிடைச்சான்..செத்தான்..”

சட்டென்று நிகழ் காலத்துக்கு வந்தவனாய் என்ன சொன்னீங்க என்று கோவாலு கேட்க, அந்த பெண்ணை பெற்ற மகாராசனும் பாக்ஸ் ஸ்டார் ஜோஷி மணியிடம் ஜோசியம் பார்க்க சென்றிருப்பது தெரிய வந்தது. சிரித்து விட்டான்.

அவள் ஏன் சிரிக்கிறீர்கள் என கேட்க, அவனோ அவன் கதையை சொல்ல, கேட்டு விட்டு அவளும் வாய் விட்டு சிரிக்க உள்ளே கள் சிலையாய் உள்ள “சனி” பகவானோ மெல்லியதாய் புன்னகை புரிந்தான்.

******************** முற்றும் ****************************

முடிவுரை:

கட்டுரையாய் எழுத ஆரம்பித்தேன்.. நடுவில் கதையாய் எழுதலாமே என்று நினைத்து கதையாய் எழுதி விட்டேன். கட்டுரை சாயல் வர ஆங்காங்கே உரைகள் போட்டாயிற்று.

கதை கதையாம் கட்டுரையாம்.

- கார்த்திகேயன் வி

- @iamkeechan

- 04-05-2013